புதுடெல்லி: தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க பயன்படுத்தப்படும் 'பெகாசஸ்' உளவு மென்பொருளை இந்திய அரசு வாங்கியதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க் டைம்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ள புலனாய்வுக் கட்டுரை ஒன்றில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் புது புயலைக் கிளப்பும் என எதிர்பார்ப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு இஸ்ரேலுடனான இரண்டு பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 'பெகாசஸ்' மென்பொருளை வாங்கியது இந்தியா என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் பிரமுகர்கள், செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் உளவு பார்க்க 'பெகாசஸ்' மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்தியாவிலும் இந்த ஒட்டுக்கேட்புப் படலம் நிகழ்ந்துள்ளதாக ஒரு தரப்பினர் புகார் எழுப்பினர்.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. எட்டு வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி புதிய பரபரப்புக்கு வித்திட்டுள்ளது.

