உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்
மும்பை: பிரபல பின்னணிப் பாடகி லதா
மங்கேஷ்கர், 92, (படம்) இம்மாதம் 8ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தெற்கு மும்பையிலுள்ள 'பிரீச் கேண்டி' மருத்துவ
மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மகாராஷ்டிர மாநில அமைச்சர் ராஜேஷ் டோபே நேற்று அந்த மருத்துவமனைக்குச் சென்று லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு வெண்டிலேட்டர் உதவி தேவைப்படவில்லை. இருப்பினும் செயற்கை உயிர்வாயு அளிக்கப்படுகிறது," என்று தெரிவித்தார்.
ஒரே நாளில் 893 பேர் மரணம்
புதுடெல்லி: இந்தியாவில் நேற்றுக் காலை வரையிலான
24 மணிநேரத்தில் 2,34,281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 2,51,209 பேருக்கும் சனிக்கிழமை 2,35,532 பேருக்கும் தொற்று உறுதியானது. அதேபோல் வெள்ளிக்கிழமை 627 பேரும் மறுநாள் 871 பேரும் உயிரிழந்த நிலையில் நேற்று 893 பேர் மாண்டனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பலியாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அமைச்சு கூறியுள்ளது.
75% தடுப்பூசி சாதனை
புதுடெல்லி: இந்தியாவில் தடுப்பூசி செலுத்த தகுதியான 75% மக்கள் கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டுள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டிவியா தமது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனைப் பகிர்ந்த பிரதமர் மோடி, "75% மக்கள் இரு தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர். இந்த முக்கியமான சாதனைக்காக நமது குடிமக்களுக்கு வாழ்த்து கள். தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக மாற்றிய நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.
கணவனை எதிர்த்து மனைவி
அல்மோரா: உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிலிருந்து வெளியேறிய பல்வந்த ஆர்யா என்பவர் சமாஜ்வாடி கட்சி சார்பில் சோமேஷ்வர் தொகுதியில் போட்டி யிடுகிறார். அதே தொகுதியில் இவரது மனைவி மதுபாலாவும் சுயேச்சையாகப் போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளார். தொகுதியில் வாக்குகளைப் பிரிக்க தமது மனைவியையே தமக்கு எதிராகப் போட்டியிட பல்வந்த் ஆர்யா ஏற்பாடு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

