நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது
புதுடெல்லி: இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த், 'கற்க கசடற' குறளை மேற்கோள்காட்டி நாடாளு மன்றத்தில் உரையாற்றியிருக்கிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அதிபர் உரையுடன் தொடங்கியது.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பேசிய அதிபர் ராம் நாத் கோவிந்த், 'கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டியிருந்தார்.
"திருவள்ளுவரின் கற்க கசடற எனும் குறளுக்கு இணங்க புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது. தேசிய கல்விக் கொள்கை யின் ஒரு பகுதியாக உள்ளூர் மொழிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. முக்கியமான நுழைவுத் தேர்வுகளை இந்திய மொழிகளில் நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படு கிறது," என்று அதிபர் குறிப்பிட்டார்.
"இந்தியா தனது 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடி வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த அத்தனை போர் வீரர்களுக்கும் வணக்கங்கள். வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் கொண்டாடப் படுவதையும் நினைவுகூர்கிறேன்.
"கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா திகழ்கிறது. கொரோனா தடுப்பூசி நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதால் நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டன. மத்திய அரசு அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை வழங்கும் திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் சுகாதார திட்டங்களைப் பெறுவதற்கு உதவியாக இருந்தது.
"நேரடி மானியம் மூலம் ஏழைகள் பணம் பெறுவதை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் ஏராளமான பெண்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. சமுதாயத்தில் சமநிலை இருக்கவேண்டும் என்ற அம்பேத்கரின் எண்ணத்தை செயல்படுத்துவதில் அரசு தீவிரம்காட்டி வருகிறது.
"கடந்த ஓர் ஆண்டில் நாட்டின் மொத்த வேளாண் உற்பத்திப் பொருள்கள் 33% உயர்ந்துள்ளது. இந்தியாவின் பாரம்பரியமான மழைநீர் சேகரிப்பு முறைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்; பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்' எனும் திட்டம் பெண்கள் முன்னேற வழிவகை செய்துள்ளது. இஸ்லாமியப் பெண்கள் பெரும் சவால்களைச் சந்தித்துவந்த முத்தலாக் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது,'' என்று அதிபர் ராம் நாத் கோவிந்த் மேலும் தெரிவித்தார்.

