நொய்டா: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்த சட்டங்களையும் கடந்த ஆண்டு திரும்பப் பெற்றது.
அது மட்டுமல்லாமல் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உட்பட விவ சாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்தது.
இதையடுத்து விவசாயிகள் டெல்லியில் ஓராண்டுக்கு மேலாக நடத்தி வந்த போராட்டத்தை கடந்த டிசம்பர் 9ஆம் தேதி மீட்டுக் கொண்டனர்.
ஆனால் இந்த வாக்குறுதிகளை இதுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே மத்திய அரசைக் கண்டித்து நேற்று நாடு முழுவதும் அவர்கள் துரோக தினம் அனுசரிக்க முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் விளக்கிய பாரதிய கிசான் யூனியன் சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத், "விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து மத்திய அரசு அளித்த கடிதத்தின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி எங்கள் போராட்டத்தை மீட்டுக் கொண்டோம்.
"ஆனால் மத்திய அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
"எனவே மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் துரோக தினம் அனுசரிக்கப்படும்," என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் நேற்று துரோக தினமாக அனுசரித்தனர்.

