லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக மாற்றப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் உறுதியளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, முசாஃபர் நகரில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அம்மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடத்தியபோது குற்றங்கள் அதிக அளவில் நடந்ததாகவும் கடந்த ஐந்து ஆண்டுகால பாஜக ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாகவும் அமித் ஷா கூறினார்.
சமாஜ்வாதி கட்சியின் ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த புள்ளிவிவரங்களை அகிலேஷ் யாதவ் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறாரா என்றும் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
இதேபோல, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளையும் அமித் ஷா கடுமையாகச் சாடினார்.
உத்தரப்பிரதேசத்தில் இம்மாதம் 10ஆம் தேதி முதல் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

