பெங்களூரு: ஹிஜாப், காவித் துண்டு விவகாரம் காரணமாக கர்நாடகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பள்ளி, கல்லூரி களுக்கு மூன்று நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை கர்நாடகா அரசு அப்படியே ஏற்றுச் செயல்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
"பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீருடை அணிய வேண்டும் என்று அரசு தெளிவாக உத்தரவிட்டுள்ளது. கர்நாடக கல்விச் சட்டத்தின் அடிப்படையில்தான் இந்த உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது," என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித், அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றுவதாக அறிவித்தார்.
மேலும், பள்ளிகளுக்கு அருகே ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, கடலோர மாவட்டமான உடுப்பியில் உள்ள சில கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
வடகர்நாடக மாவட்டமான பாகல்கோட்டையில் உள்ள பெரப்பரனபட்டி பகுதி அரசு கல்லூரியில் நடந்த போராட்டத்தின் போது கல்வீச்சும் நடந்தது. இதில் ஒரு மாணவர் காயம் அடைந்தார்.
மலைநாடு மாவட்டமான சிவமொக்காவில் நடந்த போராட்டத்திலும் கல்வீச்சில் ஒரு மாணவரின் மண்டை உடைந்தது.
ஹிஜாம் அணிந்த மாணவிகள் பள்ளிக்குள் நுணைவதைத் தடை செய்வது அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு ஈடானது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். இந்த விவகாரம் காரணமாக பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

