மும்பை: விமானத்தின் இன்ஜின் பகுதியின் மூடியாகச் செயல்படும் பாகம் கீழே விழுந்ததை அறியாத விமானிகள், அந்த விமானத்தை மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வரை இயக்கி உள்ளனர்.
நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த 'ஏடிஆர்' ரக விமானம் மும்பையில் இருந்து 70 பயணிகளுடன் குஜராத்தில் உள்ள புஹூஜ் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது.
முன்னதாக, ஓடுதளத்தில் இருந்து அந்த விமானம் மேலெழும்பியபோது, அதிலிருந்து ஏதோ ஒரு பொருள் கீழே விழுந்ததை விமான நிலையத்தின் தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் கவனித்துள்ளனர்.
இதையடுத்து விமானிக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், அனைத்து கருவிகளும் சரியாகச் செயல்படுவதாகவும் எந்தவித கோளாறும் இல்லை என்றும் தலைமை விமானி தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அந்த விமானம் குறித்த நேரத்தில் புஹூஜ் விமான நிலையத்தைச் சென்றடைந்தது. உடனடியாக விமானத்தை ஆய்வு செய்தனர். அப்போது விமான இன்ஜினை மூடியிருக்கும் பகுதிதான் கீழே விழுந்துள்ளது என்பது உறுதியானது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இத்தகவலைக் கேள்விப்பட்ட அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் மட்டுமல்லாமல் மற்ற பயணிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

