புதுடெல்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தைச் (இபிஎஃப்ஓ) சேர்ந்த 20 ஊழியர்கள், லஞ்சம் பெற்றுக்கொண்டு வைப்பு நிதி பயனீட்டாளர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று அவர்கள் மீது மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்குப் பதிந்தது.
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் பேடிஎம், ஃபோன்பே, கூகுள் பே போன்ற தனியார் நிறுவனங்களுக்கு அவர்கள் அந்த விவரங்களைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தனியார் நிறுவனங்களுக்குப் பயனீட்டாளர்கள் பற்றிய தகவல்களை இபிஎஃப்ஓ அலுவலக பணியாளர்களே அளிப்பது தொடர்பாக வெளியான புகாரின் அடிப்படையில் செயல்பட்ட சிபிஐ அதிகாரிகள், அந்த ஊழியர்கள் தங்கள் கைபேசி வழியாக பல்வேறு தகவல்களைத் தெரிவித்து இருக்கிறார்கள் என்பதைத் தாங்கள் கண்டுபிடித்ததாகக் கூறினர்.
பயனீட்டாளர்கள் பற்றிய விவரம், அவர்களுக்கு அனுப்பப்படும் ஓடிபி எனப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் ரகசிய எண் உள்ளிட்ட விவரங்களை அவர்கள் தனியார் ஆலோசகர்களுக்கு பகிர்ந்து உள்ளதும் தெரியவந்தது.
இந்தத் தகவல்களைக் கொண்டு தனியார் அமைப்புகள் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அதிகாரபூர்வ செயல்பாடுகளைப்போல செயல்பட்டுள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பயனீட்டாளர்கள் பற்றிய தகவல்களை அளிப்பதற்கு ஊழியர்கள் லஞ்சம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது.
கைபேசிச் செயலி மூலமாக பயனீட்டாளர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்களை இந்த ஊழியர் கள் தங்களது கைபேசியில் படமெடுத்து அதை நிறுவனங்களுக்குப் பகிர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மும்பை அலுவலகத்தில் 2021 டிசம்பர் 30ஆம் தேதி 712 போலி ஆவணங்கள் மூலம் வருங்கால வைப்பு நிதியை அந்த அலுவலக ஊழியர்களே பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இதனால் ஏற்பட்ட இழப்பு ரூ.18.97 கோடியாகும். இது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

