ஜி-20 செயலகம் அமைக்க ஒப்புதல்
புதுடெல்லி: அனைத்துலகப் பொருளாதாரம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண 20 நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பிற்கு ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் தலைமை வகித்து வருகின்றன. வருகிற டிசம்பர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதிவரை இந்தியா தலைமை வகிக்க உள்ளது. இந்நிலையில், ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க தேவையான ஏற்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புத்தல் அளித்துள்ளது.
பிளாஸ்டிக் கேனில் சிக்கிய புலியின் தலை
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூர் சிற்றூர் அருகே பிளாஸ்டிக் தண்ணீர் கேனில் தலை சிக்கிய நிலையில் புலி ஒன்று காணப்பட்டது. தண்ணீர் குடிப்பதற்காக அதற்குள் தலையைவிட்ட புலிக்கு, மீண்டும் தலையை வெளியில் எடுக்கமுடியவில்லை. அவ்வழியே சென்ற ஒருவர், அந்தப் புலியைக் காணொளியாகப் பதிவுசெய்து தேசிய பூங்கா வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தார். அந்த அதிகாரிகள் அந்தச் சிற்றூர் மக்களின் உதவியுடன் காட்டுக்குள் ஓடிப்போன புலியைக் கண்டுபிடித்து, அதற்கு மயக்க ஊசி செலுத்தி அதன் தலையில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் கேனை எடுத்து அதனை காட்டுக்குள் விடுவித்தனர்.
கலாசாரத்திற்கேற்ப ஊர் பெயர்கள்
மும்பை: வடகிழக்கு மாநிலத்தின் கலாசாரம், மரபுகளுக்கு ஏற்ப மாநிலத்தில் நகரங்கள், ஊர்கள், இடங்களின் பெயர்கள் மாற்றப்பட உள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா புதன்கிழமை அறிவித்தார். இதுகுறித்து அவர், தனது டுவிட்டர் பதிவில், "ஒரு பெயரில் நிறைய இருக்கிறது. ஒரு நகரம், கிராமத்தின் பெயர் அதன் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் நாகரிகத்தைப் பிரதிபலிக்க வேண்டும்," என்று பதிவிட்டுள்ளார். மக்களின் பெயர் பரிந்துரையைக் கேட்பதற்கென தனி ஒரு இணையத்தளம் நேற்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக செவ்வாய்க்கிழமை கவுகாத்தியில் மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், "கலபார் உள்ளிட்ட சில இடங்கள், மாநிலம் முழுவதும் உள்ள பிற நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்கள் மாற்றப்படும். ஏனெனில் சில பெயர்கள் மக்கள் உச்சரிக்க வசதியாக இல்லை. சில சமூகங்களை இழிவுபடுத்துவனவாக உள்ளன. அவை மாற்றப்பட வேண்டும்," என்று கூறினார். 2021 செப்டம்பரில், அசாமில் உள்ள ராஜீவ் காந்தி தேசியப் பூங்காவின் பெயரை மாற்றக்கோரி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்தியதை அடுத்து, 'ஒராங் தேசியப் பூங்கா' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

