கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் நலன் கருதி, தாம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உரிய பதில்களை அளிக்கவில்லை என அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் முட்டுக்கட்டைக்குத் தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக இருப்பதாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு முன்வர வேண்டும் என்றும் ஆளுநர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சட்டத்தின்படி, பதவி வகிக்கும் ஆளுநருக்கும் மாநில முதல்வருக்கும் இடையே பேச்சுவார்த்தையும் ஆலோசனையும் நடைபெறுவது ஜனநாயகத்துக்கு நல்லது என்று குறிப்பிட்டுள்ள ஆளுநர் ஜெகதீப் தங்கர், அரசியல் சட்ட ஆட்சி முறையில் இது பிரிக்க இயலாத ஓர் அங்கம் எனக் கூறிஉள்ளார்.
"இந்தத் திசையை நோக்கி நான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தங்களது நிலைப்பாட்டால் பலன் அளிக்கவில்லை. இத்தகைய போக்கு, அரசியல் சட்டச் சிக்கலுக்கு வழிவகுத்து விடும். அதை தவிர்ப்பதற்குத்தான் நாம் உறுதிமொழி எடுத்துள்ளோம்.
"நான் எழுப்பிய பல பிரச்சினைகளுக்கு நீண்ட காலமாக நீங்கள் பதில் அளிக்கவில்லை. அரசியல் சட்டத்தின் 167வது பிரிவின்படி, தகவல் அளிக்க வேண்டியது முதல்வரின் கடமை ஆகும். மேலும், கவலை அளிக்கக்கூடிய வேறு சில அம்சங்களும் உள்ளன," என்று ஆளுநர் ஜெகதீப் தங்கர் தமது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, முதல்வர் மம்தா பானர்ஜி எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்காக ஆளுநர் மாளிகைக்கு வரலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், முட்டுக்கட்டைக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை உதவும் எனக் கூறியுள்ளார். மேற்கு வங்க ஆளுநர் தமது தலைமையிலான அரசின் செயல்பாடுகளில் குறுக்கிடுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி புகார் எழுப்பியுள்ளார். ஆனால் மாநில நலன்களை முன்வைத்து தாம் செயல்படுவதாக ஆளுநர் கூறி வருகிறார். இதனால் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

