புதுடெல்லி: ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளது.
போர் பதற்றத்தைத் தணிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தை தணிப்பதற்கான தீர்வைக் கண்டறிவதில் இந்தியா மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
அமைதியான, ஆக்கபூர்வமான, தூதரக அளவிலான பேச்சு வார்த்தைகள் தேவை என்றும் இந்த விவகாரம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் இந்தியா தொடர்பில் உள்ளது என்றும் திருமூர்த்தி தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பதுதான் இந்தியாவின் கருத்தும் நிலைப்பாடும் ஆகும் என்று குறிப்பிட்ட அவர், உக்ரேனில் ஏராளமான இந்திய மாணவர்கள் இருப்பதாகவும் அவர்களின் பாதுகாப்புக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்றும் கூறினார்.
"அனைத்து நாடுகளின் சட்டபூர்வ பாதுகாப்பு, நலன்களைக் கருத்தில் கொண்டு, வட்டார அளவிலும் அதற்கு அப்பாலும் நீண்ட கால அமைதி என்பது பாதுகாக்கப்பட வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டு பதற்றத்தை உடனே தணிக்கக்கூடிய ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும்," என்று திருமூர்த்தி மேலும் தெரிவித்தார்.

