இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) நடைபெற்ற நிலையில், வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சோனு சூட்டின் சகோதரியான மாளவிகா சூத், இந்தத் தேர்தலில் மோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த ஜனவரி 10ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தார்.
இந்நிலையில், மோகா மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற சோனு சூட்டின் காரை பஞ்சாப் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரைத் தடுத்து நிறுத்தி வீட்டிற்கு அனுப்பினர்.
இதுகுறித்து சோனு சூட் கூறுகையில், ‘‘சில எதிர்கட்சிகளிடம் இருந்து பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது. சில வாக்குச்சாவடிகளில் பணம் விநியோகிக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. சோதனை செய்து நியாயமான தேர்தலை நடத்துவது எங்கள் கடமை. அதனால்தான் நாங்கள் வெளியே சென்றோம்,’’ என விளக்கமளித்தார்.