கோல்கத்தா: மேற்கு வங்க ஆளுநருக்கும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையேயான மோதல் பெரிதாகி வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையைக் கூட்டும்படி முதல்வர் மம்தா முன்வைத்த பரிந்துரையை ஆளுநர் ஜெகதீப் தங்கார் நிராகரித்துள்ளார். இதனால் அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.
முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் அண்மைக்காலமாக சலசலப்பு நிலவி வருகிறது.
உட்கட்சிப் பூசல் பெரிதானதையடுத்து, சட்டப்பேரவையை தற்காலிகமாக முடக்கி வைக்குமாறு ஆளுநரைக் கேட்டுக்கொண்டார் முதல்வர் மம்தா. அதை ஏற்று பேரவையை முடக்கி உத்தரவிட்டார் ஆளுநர்.
இந்நிலையில், எதிர்வரும் மார்ச் 7ஆம் தேதி பேரவையை மீண்டும் கூட்டுமாறு முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஆளுநருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இம்முறை மம்தாவின் பரிந்துரை ஏற்கப்படவில்லை.
சட்டப்பேரவையை கூட்டுவதற்கு மாநில அமைச்சரவைதான் பரிந்துரைக்க வேண்டும் என்றும் மார்ச் 7ம் தேதி சட்டப்பேரவையை கூட்டும்படி முதல்வர் பரிந்துரை செய்திருப்பதை அரசியலமைப்பு சட்டத்தின்படி ஏற்க இயலாது என்றும் ஆளுநர் தரப்பில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அரசியலமைப்பு சட்டத்துக்குட்பட்டு முதல்வரின் பரிந்துரைக் கடிதமும் கோப்புகளும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

