புதுடெல்லி: 12 முதல் 15 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்குக் கிருமித்தொற்றுக்கு எதிராக 'கோர்பேவேக்ஸ்' தடுப்பூசி போட இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அவசரகால அனுமதி அளித்துள்ளது.
சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அளிக்கப்பட்டுள்ள இந்த அனுமதியைத் தொடர்ந்து, தடுப்பூசியின் செயல்திறன் குறித்து வல்லுநர் குழு ஆய்வு செய்து, 12-15 வயது வரை உள்ளவர்களுக்குப் போடலாம் என பரிந்துரை செய்துள்ளது.
இருப்பினும் 15 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்த தடுப்பூசியை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளது.
கோர்பேவேக்ஸ் தடுப்பூசி கொரோனா கிருமியில் உள்ள ஸ்பைக் புரோட்டின் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.
28 நாள்கள் இடைவெளியில் 2 டோஸ்கள் போடும் வகையில் கோர்பேவேக்ஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வயதினருக்கு ஏற்கெனவே கோவேக்சின், ஸைகோவ்-டி என இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது நாட்டில் சிறார்களுக்கான தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்த உதவும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
15 முதல் 17 வயது பிள்ளைகளில் 76 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுவிட்ட நிலையில், தற்போது கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

