ஷிவமொகா: கர்நாடகா மாநிலம் ஷிவமொகாவில் பஜ்ரங் தள் பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் 12 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதானவர்கள் அனைவரும் 20 முதல் 22 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும் போலிசார் கூறினர்.
இதனிடையே, ஹிஜாப் விவகாரம் உள்பட அனைத்து கோணங்களிலும் இந்த கொலை வழக்கில் விசாரணை நடப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
"ஹிஜாப் சர்ச்சைக்கு பின்புலத்தில் உள்ள அமைப்புகளுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடைபெறுகிறது. கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
கர்நாடக மாநிலம் ஷிவமொகா டவுன் சீகேஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷா என்ற 25 வயது பஜ்ரங் தள் பிரமுகர் திங்கட்கிழமை இரவு கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையே, ஹர்ஜாவின் இறுதி ஊர்வலத்தில் 5,000 பேர் கலந்துகொண்டனர்.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் சாலையோரம் நின்ற வாகனங்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டன. கல்வீச்சில் 2 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவங்களால் பதற்றம் நிலவியது. 144 தடை உத்தரவு வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

