புட்டினிடம் பிரதமர் மோடி பேச வேண்டும் என உக்ரேன் தூதரகம் வலியுறுத்து
புதுடெல்லி: உக்ரேனில் உள்ள ராணுவத் தளங்கள், விமானத் தளங்கள் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன.
குறிப்பாக முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்ய படைகள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. ரஷ்யா, கொத்துக் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களால் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரேன் தலைநகர் கியூ விமான நிலையத்துக்கும் அது குறி வைத்துள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரேனில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அதே சமயத்தில் ரஷ்யாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரேன் ராணுவம் தெரிவித்தது. லுஹான்ஸ்க் நகரில் ரஷ்யாவின் ஐந்து போர் விமானங்களையும் ஒரு ஹெலிகாப்டரையும் வீழ்த்தியுள்ளதாக அது கூறியது.
இந்த நிலையில் உக்ரேன் மீதான போரை ரஷ்யா நிறுத்து வதற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று உக்ரேன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள உக்ரேன் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
ஐநா பாதுகாப்பு சபையின் இந்திய பிரதிநிதியான டி.எஸ். திருமூர்த்தி, உக்ரேன்- ரஷ்யா இடையிலான பதற்றம் கவலையைத் தருவதாகக் கூறியுள்ளார்.
"தற்போதைய சூழல் மிகப் பெரிய சிக்கலுக்கு வித்திடும்," என்றார் அவர்.
மற்றொரு நிலவரத்தில் உக்ரேன்-ரஷ்யா போர் குறித்து மூத்த அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

