மெல்பர்ன்: சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டுள்ளது.
அந்தச் சிலையை தமிழகத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அந்த ஆஞ்சநேயர் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
செந்துறை காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிைலயில் அரிய ஆஞ்சநேயர் சிலை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
இணையத்தளம் வாயிலாக இந்த சிலையின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆஞ்சநேயர் சிலை அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டு நியூயார்க் நகரில் 37,500 டாலருக்கு ஏலம் விடப்பட்டது.
ஏலத்தில் விற்கப்பட்ட இந்தச் சிலையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்வசம் வைத்திருந்தார்.
அந்தச் சிலை மீட்கப்பட்டு செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ஒரு மாதத்தில் ஆஞ்சநேயர் சிலை தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் என்று கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய கலாசார அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, அமெரிக்க உள்துறை சிலையை மீட்டுள்ளதாக தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஐநூறு ஆண்டு பழமையான வெண்கலச் சிலை விரைவில் தமிழகம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

