மாஸ்கோ: ரஷ்யாமீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள், அனைத்துலக விண்வெளி மையத்திற்கான ஒத்துழைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, 500 டன் எடைகொண்ட அனைத்துலக விண்வெளி மையம், இந்தியா, சீனா மீது விழக்கூடும் என்று ரஷ்ய விண்வெளித்துறைத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்துலக விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகளில் அமெரிக்காவும் ரஷ்யாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதன் இயக்கத்தைக் கண்காணிப்பது, விண்வெளி மையம் பூமிக்கு மிக அருகில் வராமல் இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய பணிகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய விண்வெளித்துறைத தலைவர் டிமிட்ரி ரோகொசின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்க அதிபரின் புதிய பொருளாதார தடைகள் ரஷ்ய விண்வெளி திட்டங்கள் உள்பட விண்வெளித்
துறையில் பின்னடைவை ஏற்படுத்தும்.
"நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால், 500 டன் எடைகொண்ட விண்வெளி மையத்தின் பகுதி இந்தியா, சீனா மீது விழ வாய்ப்பு உள்ளது.
"அமெரிக்கா அல்லது ஐரோப்பா மீது சிறு பாகங்களாக விழக்கூடிய அனைத்துலக விண்வெளி நிலையத்தை யார் காப்பாற்றுவது?
"விண்வெளி மையம் ரஷ்யாவுக்கு மேல் பறக்கவில்லை. ஆகையால் அனைத்து ஆபத்துகளும் உங்களுக்குத்தான். நீங்கள் அதற்கு தயாராக இருக்கிறீர்களா?" என்று கேட்டுள்ளார்.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது விண்வெளித் துறை உள்ளிட்ட பலதுறைகளுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தடை விதித்துள்ளன.

