புதுடெல்லி: இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் நடந்து வரும் சட்டமன்றத் தேர்தல்களில் வாக்காளர்களை ஈர்ப்பதற்கான மிகப்பெரிய தூண்டுதலாக போதைப்பொருள் உருவெடுத்துள்ளது.
உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் சமயத்தில் இம்மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரொக்கம் உட்பட கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் மதிப்புடைய, வாக்காளர்களுக்கு கொடுக்கப்படவிருந்த இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.
இது, 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கைப்பற்றப்பட்ட 299.8 கோடி ரூபாயைவிட மூன்று மடங்கிற்கு மேல் அதிகமாகும்.
இதில், கிட்டத்தட்ட 510 கோடி ரூபாயுடன் பஞ்சாப் முதலிடத்திலும் ரூ.307.92 கோடியுடன் உத்தரப் பிரதேசம் 2வது இடத்திலும் 167.83 கோடி ரூபாயுடன் மணிப்பூர் மூன்றாவது இடத்திலும் உத்தரகாண்ட், கோவா அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
இம்மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ஏறத்தாழ ரூ.569.52 கோடியாகும். அதற்கு அடுத்தபடியாக ரூ.140.29 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது இந்தியாவில் போதைப் பொருள் புழக்கம் பெருமளவு அதிகரித்துள்ளதைக் காட்டுவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

