ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் போட்டித்தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில் தண்டனையும் அபராதமும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து தேர்வு ரத்தானது.
இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் உட்பட 40க்கும் மேலானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், அரசு, வாரியங்களின் போட்டித்தேர்வு வினாத்தாள்களைக் கசியவிடுவது, அதற்கான முயற்சி மேற்கொள்வது, முறைகேடாக வினாத்தாள் பெறுவது, தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோர், அதற்கு உதவுவோருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். அத்துடன் 10 லட்சம் முதல் 10 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
அத்துடன் முறைகேடுகளில் ஈடுபடுவோர், இரண்டு ஆண்டுகளுக்குத் தேர்வுகளில் பங்கேற்க முடியாது. தேர்வை நடத்தும் நிறுவனம் அல்லது நிர்வாகத்தில் உள்ளவர் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானால், தேர்வுக்கான முழு செலவையும் அவர்களே ஏற்க வேண்டியிருக்கும்.

