ஊர் திரும்பியோர் நிம்மதிப் பெருமூச்சு
புதுடெல்லி: போர் நடந்துகொண்டு இருக்கும் உக்ரேனில் தப்பிப் பிழைத்தது அதிசயம்தான் என்றும் இப்போது நிம்மதியாக உணர்கிறோம் என்றும் அந்நாட்டின் சுமி நகரில் இருந்து நேற்றுக் காலை புதுடெல்லி திரும்பிய இந்திய மாணவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
சுமி அரசுப் பல்கலைக்கழகத்தில் ஆறாம் ஆண்டு மருத்துவக் கல்வி பயின்று வந்த தீரஜ் குமார் எனும் மாணவர், தம்முடைய பெற்றோரை மீண்டும் காண முடிந்ததில் பெருமகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
"சுமியில் எதிர்பாராத பல சவால்களை எதிர்கொண்டோம். போருக்கு நடுவில், கடந்த 13 நாள்களாக உயிர் பிழைத்திருந்தது பயங்கரமான அனுபவம். சொந்த நாட்டிற்குத் திரும்பியது ஏதோ அதிசயம்போல் இருக்கிறது," என்றார் இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ்.
தாங்கள் பாதுகாப்பாக வெளியேறி, நாடு திரும்ப முடிந்ததற்காக இந்திய அரசாங்கத்திற்கும் உக்ரேன், போலந்து நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
ஒவ்வொருமுறை அபாயச்சங்கு ஒலித்தபோதும் தாங்கள் பதுங்குகுழிகளுக்கு ஓட வேண்டி இருந்ததாகச் சொன்னார் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முசாஃபர்நகரைச் சேர்ந்த மகிமா ரதி எனும் மாணவி.
போலந்தின் ஜெஸூஃப் நகரில் இருந்து 240 மாணவர்களுடன் நேற்று முன்தினம் இரவு இந்திய நேரப்படி 11.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், நேற்றுக் காலை 5.45 மணிக்குப் புதுடெல்லியில் தரையிறங்கியது.
சுமி நகரிலிருந்து கடைசியாக வெளியேற்றப்பட்ட 600 மாணவர்களை மீட்க இந்தியா மூன்று விமானங்களை போலந்துக்கு அனுப்பியது. உக்ரேனில் சிக்கிய இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் கங்கா' எனும் பெயரில் இந்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.

