புதுடெல்லி: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகளையும் பஞ்சாப் மாநிலத்தின் மிக முக்கியமான அகாலி தளம் கட்சியையும் வீழ்த்தி ஆம் ஆத்மி மாபெரும் அரசியல் சாதனையை படைத்தது.
பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்துவிட்ட அமோக வெற்றிக் களிப்பில் அந்தக் கட்சி அடுத்த இலக்கை நிர்ணயித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது.
இதில் எப்படியும் வென்று அந்த மாநிலத்தையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் ஓங்கி அறிவித்தன.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றியை உறுதிப்படுத்திய அதே குழுவை ராஜஸ்தானுக்கு அனுப்ப கட்சியின் தலைமைபீடம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் ராஜஸ்தானில் ஆம் ஆத்மியின் ஜம்பம் பலிக்காது என்று அந்த மாநிலத்தின் இரண்டு பெரும் போட்டி அரசியல் கட்சிகளான காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் திட்டவட்டமாகத் தெரிவித்தன. ஆம் ஆத்மி ராஜஸ்தானில் தன் இறக்கையை விரிக்க வாய்ப்பே இல்லை. ராஜஸ்தான் வேறு, பஞ்சாப் வேறு என்று அவை கூறின.
பஞ்சாப் வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே உற்சாகம் அடைந்து அடுத்த ஆண்டு தேர்தலை நினைத்து செயல்பட தொடங்கி விட்டதாக ராஜஸ்தான் ஆம் ஆத்மி தொண்டர்கள் கூறி உள்ளனர்.

