புதுடெல்லி: உக்ரேனில் இருந்து தப்பித்து அதன் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த ஏராளமான இந்திய மாணவர்களை மீட்ட இந்தியப் பெண் விமானிக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
மகாஸ்வேதா சக்ரவர்த்தி என்ற அந்தப் பெண் விமானி 800க்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்பதற்காக போலந்து, ஹங்கேரி நாடுகளுக்குப் பலமுறை பறந்துள்ளார்.
அவ்விரு நாடுகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு டெல்லிக்கும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்துக்கும் அவர் வந்துள்ளார்.
கோல்கத்தாவைச் சேர்ந்த மகாஸ்வேதாவுக்கு 24 வயதாகிறது. மேற்கு வங்க பாஜக மகளிரணி தலைவரான தனுஜாவின் மகளான இவரது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
போர் நடந்து வரும் நிலையில், உக்ரேனின் அண்டை நாடுகளுக்குச் சென்று துணிச்சலுடன் மாணவர்களை மீட்டு வந்த மகாஸ்வேதாவைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, உக்ரேனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் அனைவரும் இந்தியாவில் தங்கள் கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் பிரவாசி சட்டப்பிரிவு என்ற பெயரில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாத நிலையில் இருப்பதாகவும் தங்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க எந்தவிதமான விதிமுறைகளும் நடைமுறையில் இல்லை என்றும் அம்மனுவில் மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
"எனவே, போரால் பாதிக்கப்பட்டு திரும்பியுள்ள நாங்கள் எந்த நிலையில் படிப்பைத் தவறவிட்டோமோ, அதேநிலையில் இருந்து இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பைத் தொடர்வதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்," என மாணவர்கள் கோரியுள்ளனர்.
இந்நிலையில், உக்ரேனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களை மருத்துவர்களாக்குவதை உறுதி செய்வோம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
உக்ரேனில் இருந்து திரும்பிஉள்ள மாணவர்களை அதிர்ச்சியில் இருந்து விடுவித்து பார்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் அவர்களுக்கு உதவுவதில் மத்திய அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் என்றும் நாடாளுமன்றத்தில் அமைச்சர் கூறினார்.

