புதுடெல்லி: ரஷ்யா, உக்ரேன் இடையிலான போர் காரணமாக இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
சரக்குகளை அனுப்புவதற்கான கட்டணம் அதிகரித்துள்ளதாகவும் போர் சூழல் காரணமாக ஏற்றுமதி யாளர்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரு வாரங்களாக உக்ரேன் மீது ரஷ்ய துருப்புக்கள் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அனைத்துலக விநியோகச் சங்கிலி ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் பரவலாக ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய ஏற்றுமதியாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய சரக்குகள் குவிந்துள்ள போதிலும், அதற்கான கொள்கலன்கள் போதிய அளவில் இல்லை என்றும் அதனால் சரக்குகள் தேங்கிக்கிடப்பதாகவும் ஏற்றுமதியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் சரக்குகளை கையாள்வதற்கான, ஏற்றுமதி செய்வதற்கான கட்டணங்கள் சுமார் 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஏற்றுமதிக் கட்டண உயர்வு, கொள்கலன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்றுமதி செய்ய வேண்டிய பொருள்கள் அதிகமாக உள்ள போதிலும், ஏற்றுமதி நிறுவனங்களால் பயனடைய முடியவில்லை என அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
"தற்போதைய நிலவரம் இந்திய ஏற்றுமதியாளர்களை கவலை அடையச் செய்துள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி கச்சா எண்ணெய்யைப் பெருமளவு சார்ந்துள்ளது. இந்நிலை மாற வேண்டும். இது காலத்தின் கட்டாயம். கச்சா எண்ணெய்க்குப் பதிலாக பசுமை ஹைட்ரஜன் போன்றவற்றை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்த வேண்டும்," என அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தி உள்ளார்.
மேலும், அனைத்துலகச் சந்தையில் போட்டி போடும் வகையில் இந்திய ஏற்றுமதித் துறையை மேம்படுத்த ரூ.46,000 கோடி முதலீட்டில் சரக்குப் போக்குவரத்து தொடர்பாக 35 பன்னோக்கு மாதிரி தளவாடப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

