சண்டிகர்: தமது பதவியேற்பு விழாவுக்கு வரும் ஆண்கள் மஞ்சள் நிற 'டர்பனு'ம் பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டாவும் அணிந்து வர வேண்டும் என பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ள பகவந்த் மான் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன் மூலம் பகத் சிங் ஊரான கட்டர்காலனை மஞ்சள் நிறமாக மாற்றுவோம் என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான பகவந்த் மான் அம்மாநில முதல்வராக நாளை பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவை ஆளுநர் மாளிகையில் நடத்தாமல், பகத்சிங்கின் ஊரான கட்டர் காலனில் நடத்த இருப்பதாகவும் அவர் கூறிஉள்ளார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய பகத்சிங் மஞ்சள் நிற 'டர்பன்' அணிந்திருந்ததாக ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். எனவே பதவியேற்பு விழாவின்போது பகத் சிங்கின் சொந்த ஊர் முழுவதும் மஞ்சள் நிறம் மட்டுமே தெரிய வேண்டும் என்று அக்கட்சித் தலைமை தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
நாளை முதல்வராகப் பதவியேற்பதை அடுத்து, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்துதான் ராஜினாமா செய்வதாக பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
"எனது பதவியேற்பு நிகழ்வுக்கு வரும் சகோதரர்களும் சகோதரிகளும் மஞ்சள் நிற டர்பனும் துப்பட்டாவும் அணிந்து வர மறவாதீர்கள்," என்று பகவந்த் மான் கேட்டுக்கொண்டுள்ளார்.

