கோல்கத்தா: கவுன்சிலர்கள் இருவர் அடுத்தடுத்து சுட்டுக்கொல்லப்பட்டதால் மேற்கு வங்கத்தில் பதற்றம் நிலவுகிறது. கொலையாளிகளுக்கு காவல்துறை வலைவீசி உள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 48 வயதான அனுபம் தத்தா, பன்னிஹாட்டி பகுதி கவுன்சிலர் ஆவார்.
நேற்று முன்தினம் மருந்துக் கடைக்குச் சென்ற அவர், சில மருந்துகளை வாங்கிய பின் வீடு நோக்கி நடந்து வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்றில் திடீரென அங்கு வந்த இருவர், அனுபம் தத்தாவை நோக்கி சரமாரியாகச் சுட்டனர்.
இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 52 வயதான தபன் காண்டு என்ற கவுன்சிலரும் நேற்று முன்தினம் மாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள்தான் தபன் காண்டுவை கொன்றதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சம்பவம் நடந்த ஜல்டா, ரகுநாத்பூர் நகராட்சிகளில் 12 மணி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.
இரு பகுதிகளிலும் பதற்றம் நீடித்து வருவதாகவும் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகத்துக்குரியவர்கள் உடனுக்குடன் கைது செய்யப்படுவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

