புதுடெல்லி: ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கர்நாடகாவில் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
'ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான விஷயமல்ல. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப்புக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்' என அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து இஸ்லாமிய அமைப்பினர் கர்நாடகாவின் சில பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாநிலம் தழுவிய அளவில் நேற்று முழு அடைப்பு போராட்டத்தை இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு நடத்தியது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் நிறுவனங்கள் செயல்படவில்லை. சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடுப்பி, உத்தர கன்னடா, தட்சின கன்னடா, தார்வார், மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெங்களூரில் மார்ச் 21 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மற்ற மாவட்டங்களில் அடுத்தகட்ட ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
இதற்கிடையே ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் ஹோலி விடுமுறைக்குப் பிறகு விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் முழு அடைப்புப் போராட்டத்தை அடுத்து கர்நாடக காவல்துறை, மாநிலம் முழுவதும் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

