புதுடெல்லி: பாஜகவில் இனி படித்த இளையர்களுக்கும் பெண்களுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாஜகவை அசைக்க முடியாத சக்தியாக உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளதாக என்டிடிவி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக நான்கு மாநிலங்களில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. எனினும் அம்மாநிலங்களில் இன்னும் பதவியேற்பு விழா நடைபெறவில்லை.
இம்முறை மாநில அமைச்சரவைகளில் படித்த இளைஞர்களையும் பெண்களையும் அதிக எண்ணிக்கையில் இடம்பெறச் செய்ய பிரதமர் மோடி விரும்புவதாகக் கூறப்படுகிறது.
மேலும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த எம்எல்ஏக்களுக்கு மாநில அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வெற்றிபெற்ற எம்எல்ஏக்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் மாநிலத் தலைமையிடம் கேட்டுப் பெற்றுள்ளது பாஜக தலைமை.
மோடி தலைமையிலான குழுவினர், அவற்றைப் பரிசீலித்த பிறகு புதிய அமைச்சரவை குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இதன் மூலம் அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாஜகவை தேசிய அளவில் பலமான கட்சியாக உருமாற்ற வேண்டும் என்பதும்தான் பிரதமர் மோடியின் திட்டம் என ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

