பெங்களூரு: இந்தியாவின் தற்காப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டுக் கழகம்(டிஆர்டிஓ), உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஹைபிரிட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெங்களூருவில் ஏழு மாடிக் கட்டடத்தை 45 நாட்களில் கட்டி முடித்துள்ளது.
மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தக் கட்டடத்தை நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
''உள்நாட்டுப் போர் விமானத் தயாரிப்புக்காக மிகக் குறுகிய காலத்தில் அதேநேரம் மிகப் பெரிய அளவிலான கட்டடத்தை டிஆர்டிஓ அதிகாரிகள் கட்டி முடித்திருப்பது பெருமைக்கு உரிய சாதனை,'' என்றார் அவர்.
ஹைபிரிட் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் இவ்வளவு குறைந்த காலத்தில் நிரந்தரக் கட்டடம் ஒன்றை எழுப்பியிருப்பது இதுவே முதல்முறை என்று டிஆர்டிஓ அதிகாரிகள் கூறினர்.
புதிய கட்டடம், நகர்த்துவதற்கும் ஏதுவாகக் கட்டப்பட்டுள்ளது.
நாட்டின் கட்டுமானத் துறை வரலாற்றில் இது சிறப்பிடம் பெறுவதாகவும் கூறப்பட்டது.
ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட உள்நாட்டுப் போர் விமானங்களின் தயாரிப்பு, ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் இந்தக் கட்டடத்தில் மேற்கொள்ளப்படும் என்று தற்காப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் தெரிவித்துதனர்.

