அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத் தேர்தலில் அபார வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் திரு பகவந்த் மான், ஊழலுக்கு எதிராகப் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்படும் என்றும் அந்த எண்ணில் 'வாட்ஸ்அப்' மூலம் தம்மிடம் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் டுவிட்டரில் அவர் அவ்வாறு பதிவிட்டார்.
"மக்களில் 99% பேர் நேர்மையானவர்கள். மீதியுள்ள ஒரு விழுக்காட்டினரால் நாட்டின் அமைப்புமுறை சிதைகிறது,' என்று கூறிய அவர், பகத்சிங் நினைவுநாளான மார்ச் 23ஆம் தேதி, ஊழலுக்கு எதிராகப் புகார்களைத் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண் அறிவிக்கப்படும் என்றார்.
"அது எனது தனிப்பட்ட வாட்ஸ்அப் எண். உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் அது குறித்து வீடியோ அல்லது ஆடியோ பதிவுகளை எனக்கு அனுப்புங்கள். ஊழல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாபில் இனி ஊழலுக்கு இடமில்லை," என்றார் புதிய முதல்வர்.
இந்நிலையில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான திரு அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் எடுக்கும் நடவடிக்கையைப் பாராட்டியதுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

