சென்னை: லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இருந்து சீனா தனது ராணுவத் துருப்புகளை முழுமையாகத் திரும்பப் பெறும் வரை அந்நாட்டுடன் வழக்கமான நல்லுறவைப் பேண வாய்ப்பில்லை என இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் ஷ்ரிங்லா, இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களை மீறியதற்கான காரணத்தை சீனா இதுவரை தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையின்போது, சீனாவுடனான எல்லைப் பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"இதையடுத்து, கிழக்கு, தென் சீனக் கடல் விவகாரங்களில் ஜப்பானின் நிலைப்பாடு குறித்து பிரதமர் மோடியிடம் ஜப்பான் பிரதமர் விவரித்தார்.
"இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்புத்துறை சார்ந்த ஒத்துழைப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
"மேலும் இரு நாடுகளும் இந்தோ பசிஃபிக் வட்டாரத்தில் கடல்சார் பாதுகாப்பில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இந்தியா விரும்புவதாக மோடி கூறினார்," என்று ஹர்ஷ் ஷ்ரிங்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில், கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட ஒத்துழைப்புக்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என்று இரு தலைவர்களும் மீண்டும் ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
"லடாக் எல்லைப் பகுதியின் தற்போதைய சூழல் குறித்து ஜப்பானிடம் விரிவாக விவரிக்கப்பட்டது. அங்கு துருப்புக்கள் குவிக்கப்படுவது, அவ்வப்போது நடக்கும் ஊடுருவல் முயற்சிகள் குறித்தும் விளக்கப்பட்டது.
"இந்த விவகாரங்களுக்கு உரிய தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும் அதுவரை சீனாவுடனான உறவுகள் இயல்பாக இருப்பதாக கருத வாய்ப்பே இல்லை என்றும் ஜப்பானிடம் தெரிவிக்கப்பட்டது.
"எனவே, தற்போது விவாதிக்கப்படும் விஷயங்கள் தொடர்பில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்களைப் பொறுத்தே இரு நாடுகளின் உறவு இயல்பு நிலைக்குத் திரும்புவது உறுதியாகும்," என்றும் ஹர்ஷ் ஷ்ரிங்லா மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, விரைவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்க சீனா ஆர்வம் கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அம்மாநாட்டில் ரஷ்ய அதிபர் புட்டினும் பங்கேற்கிறார்.
இந்நிலையில் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளைக் கொண்டு முத்தரப்பு மாநாட்டை நடத்த வேண்டும் என்றும் சீனா விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்நாடு சத்தமின்றி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
எனினும், லடாக் எல்லைப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காணப்படும் வரை சீன அதிபரை நேரில் சந்தித்துப் பேசுவதை பிரதமர் மோடி விரும்பவில்லை என்றும் ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

