புதுடெல்லி: உக்ரேன், ரஷ்யா இடையேயான மோதல் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை குவாட் அமைப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நிலைப்பாட்டை மதிப்பதாகவும் அதை ஏற்றுக்கொள்வதாகவும் இந்தியாவிற்கான ஆஸ்திரேலியாவின் தூதர் பேரி ஓஃபேரல் கூறியுள்ளார்.
எல்லா நாடுகளின் உறவும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வெளியுறவுக் கொள்கை என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபட்டு இருப்பது இயல்புதான் என்றும் அவர் தெரிவித்தார்.
"உக்ரேன் மீதான போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி ஏற்கெனவே கூறிவிட்டார். அதோடு தனது நட்புகளை பயன்படுத்தி போரை நிறுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்," என்று பேரி ஓஃபேரல் சுட்டிக்காட்டினார்.
இந்தியா இதுவரை செய்துள்ளவை நல்ல விஷயம்தான் என்றும் இந்தியாவின் நிலைப்பாட்டை எதிர்க்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவிக்கையில், இந்தியாவின் செயல்பாடு அமெரிக்க விதிமுறைகளுக்கு எதிரானதல்ல என்று குறிப்பிட்டிருந்தது.
எனினும் வரலாற்றின் தவறான பக்கத்தில் இந்தியா நின்றுவிடக்கூடாது என வெள்ளை மாளிகை கூறியிருந்தது.
குவாட் என்பது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பு ஆகும்.கடல்சார் துறை சார்ந்த பாதுகாப்பு, ஒத்துழைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு இது.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதற்கு குவாட் அமைப்பில் உள்ள மற்ற மூன்று நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா மட்டுமே ரஷ்யாவுக்கு எதிராக ஏதும் கூறவில்லை.
ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் ரஷ்யாவிற்கு எதிராக கடும் பொருளாதாரத் தடைகளை விதித்து உள்ள போதிலும், இந்தியா உக்ரேனை ஆதரிக்கவில்லை. மாறாக நடுநிலை வகிப்பதாகக் கூறியுள்ளது.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதாகவும் அறிவித்தது.
இதனால் குவாட் அமைப்பு சிதைந்துபோகும் என்று ஒரு தரப்பினர் கருதினர்.
ஆனால் திடீர்த் திருப்பமாக உக்ரேன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை குவாட் நாடுகள் ஏற்றுக்கொண்டதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.