போபால்: கொடூர குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் சிறையில் கோவில் அர்ச்சகர் ஆவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் அக்கைதிகள் கௌரவமான மறுவாழ்வுக்குத் தயாராகி வருவதாக இந்தப் பயிற்சியை அளிக்கும் காயத்ரி சக்திபீத் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் உறுப்பினர்கள் முதற்கட்டமாக போபால் மத்திய சிறையில் உள்ள கைதிகளை நேரில் சந்தித்துப் பேசி மனநல ஆலோசனைகள் வழங்குகின்றனர். அதன் பின்னர் கைதிகளின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வேத சடங்குகளில் ஆர்வம் உள்ள, சமுதாயத்துடன் இணைந்து வாழும் விருப்பம் உள்ள கைதிகள் மட்டும் அர்ச்சகர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
துவக்க நிலையில் மாதத்திற்கு ஐம்பது கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, 'யுக் புரோஹித்' என்ற அர்ச்சகருக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
"இதன் மூலம் சிறைக் கைதிகளாக தண்டனையை அனுபவித்த அவர்கள், விடுதலை பெற்று வெளியே சென்றதும் மனிதாபிமானத்துடன் செயல்பட முடியும். பிறரைக் கவனித்துக்கொள்வதுதான் 'புரோஹித்' என்பதன் அர்த்தம்," என்கிறார்கள் காயத்ரி சக்திபீத் அமைப்பினர்.
சிறைக் கைதிகள் மன அழுத்தத்துக்கு ஆட்படுவர் என்றும் ஐம்பது கைதிகளை தேர்வு செய்து பயிற்சி வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றும் போபால் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் தினேஷ் நர்காவே தெரிவித்துள்ளார்.
"பயிற்சி பெறுபவர்களில் பெரும்பாலோர் ஏழைகள், சுமாராக படித்தவர்கள் அல்லது அதிகம் படிக்காதவர்கள். மேலும் கற்கவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது," என்றார் அவர்.
கொலைக் குற்றத்துக்காக தண்டனை அனுபவித்து வரும் சந்தீப் பவார் என்பவரும் அர்ச்சகர் பயிற்சி பெற்று வருகிறார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த தமக்கு இந்தப் பயிற்சியின் மூலம் மனதில் அமைதி ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
"என்னைப் போல பலருக்கும் ஆன்மீகக் கல்வி, சடங்குகளுடன் அன்பு, தோழமை ஆகிய நற்பண்புகளைப் பிரசாரம் செய்ய கற்றுக் கொடுக்கப்படுகிறது. முன்பு நாங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தோம்,
"ஆனால் பயிற்சிக்குப் பிறகு, ஒருவித அமைதியான உணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் சமூகத்தில் நாமும் ஓர் அங்கம் என்ற உணர்வும் ஏற்பட்டுள்ளது. நான் முன்னைவிட இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன்'," என்கிறார் சந்தீப் பவார்.

