புதுடெல்லி: இந்தியா, இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றுமதியில் சாதனைப் படைத்துள்ளது.
முதன்முறையாக 400 பில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்குகளை அது ஏற்றுமதி செய்துள்ளது.
இதனை பிரதமர் மோடி பெருமையுடன் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
"400 பில்லியன் அமெரிக்க டாலர் சரக்கு ஏற்றுமதி என்ற இலக்கை இந்தியா முதன்முறையாக எட்டி சாதனைப் படைத்துள்ளது," என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த நிதியாண்டில் 650 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்திருந்தது. இதில் 250 பில்லியன் டாலர் ஏற்றுமதி சேவைத் துறையைச் சேர்ந்தவை.
நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி இலக்கை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 300 பில்லியன் டாலராக இருந்தது.
ஓமிக்ரான் தொற்றுப் பிரச்சினை உச்சக்கட்டத்தில் இருந்த டிசம்பரிலும் 37 பில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்குகள் ஏற்றுமதி செய்யப் பட்டன என்று வர்த்தக, தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த ஜனவரியில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்தியாவின் ஏற்றுமதி தற்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
"இந்தியாவின் ஏற்றுமதி சாதனைக்கு பேருதவி செய்த விவசாயிகள், நெசவாளர்களுக்கு நன்றி. இந்தியாவின் ஏற்றுமதி சாதனைக்கு பேருதவி புரிந்த சிறு,குறு தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளர் களுக்கு நன்றி. இந்தியாவின் ஏற்றுமதி சாதனைக்கு பேருதவி புரிந்த ஏற்றுமதியாளர்களுக்கும் நன்றி. 'சுயசார்பு இந்தியா' என்ற இலக்குடன்கூடிய இந்தியாவின் பயணத்திற்கு ஏற்றுமதி சாதனை முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது," என்று தமது செய்தியில் திரு மோடி கூறியுள்ளார்.

