புதுடெல்லி: இந்தியா, அதன் விமான நிலையங்களில் அமல்படுத்தியிருந்த கொவிட்-19 கட்டுப்பாடு களைத் தளர்த்தியுள்ளது.
இந்திய விமான போக்குவரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் நோக்கோடு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி பயணிகளுக்கு இடையே இருக்கைகளில் இடைவெளி தேவையில்லை என்று இந்திய உள்நாட்டு விமான போக்கு வரத்து அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருக்கைகளுக்கு இடையே இடைவெளி தேவையில்லை என்பதால் இனி விமானத்தின் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் முன்பு போல பயணம் செய்ய முடியும்.
கிருமித் தொற்று அச்சம் காரணமாக விமானப் பணிப்பெண்கள் அதற்குரிய முன் எச்சரிக்கை பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கட்டுப்பாடும் தற்போது அகற்றப்பட்டுள்ளது.
இதனால் விமான பணிப்பெண்கள் வழக்கம் போல தங்களது சீருடைகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர். மேலும், விமான நிலையங்களிலும் பயணிகளை பரிசோதிக்கும் நடைமுறைகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

