திருமலை: ஆந்திராவின் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் மகள், முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக படிப்பில் முதல் மாணவியாகத் திகழும் ஒரு பெண்ணை பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கிவிட்டனர்.
அந்தப் பெண் கடிதம் எழுதிவைத்துவிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பாகி இருக்கிறது. இது பற்றி ஊடகத் தகவல்கள் பல விவரங்களைத் தெரிவித்துள்ளன.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பலமனேரில் செயல்படும் பிரம்மர்ஷி என்ற பள்ளிக்கூடத்தில் மிஸ்பா என்ற மாணவி 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் படிப்பில் முதல் மாணவியாக இருந்தார். ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான சுனில் என்பவரின் மகள் பூஜிதா படிப்பில் இரண்டாம் இடத்தில் இருந்தார்.
மாணவி மிஸ்பாவை பள்ளிக்கூடத்தைவிட்டு நீக்கிவிட்டால் பூஜிதா முதல் இடத்திற்கு வந்துவிடலாம் என்று திட்டமிட்ட அந்த அரசியல்வாதி, பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ரமேஷின் உதவியை நாடினார். இதன் விளைவாக மிஸ்பா பள்ளிக்கூடத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாத மிஸ்பா, தன் தந்தைக்குத் தன் கைபட ஒரு கடிதத்தை எழுதிவைத்துவிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
அந்தக் கடிதத்தில் என் மரணத்திற்கு பூஜிதாதான் ஒரே காரணம் என்று மிஸ்பா குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து மிஸ்பாவின் பெற்றோர்கள், உறவினர்கள், மாணவர் சங்கத்தினர் அனைவரும் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர்.

