புதுடெல்லி: எரிபொருள், விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மூன்று கட்டப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31ஆம் தேதி நாடு தழுவிய அளவில் முதற்கட்டப் போராட்டம் நடைபெறும் என்றும் ஏப்ரல் 2 முதல் 4ஆம் தேதி வரை நாடு முழுவதும் மாவட்ட வாரியாக உண்ணாவிரதம், கண்டன முழக்கங்கள் எழுப்பும் போராட்டம் நடைபெறும் என்றும் அக்கட்சித் தலைமை கூறியுள்ளது.
மேலும், ஏப்ரல் 7ஆம் தேதி மாநிலத் தலைநகரங்களில் மட்டும் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஆறு நாள்களில் மட்டும் ஐந்து முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
இதையடுத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாகச் சாடி வருகின்றன. சாமானியர்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி கண்டுள்ளது. இதையடுத்து, கட்சித் தொண்டர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டும் விதமாக இந்தப் புதிய போராட்டங்களை அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.
நேற்று முன்தினம் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது மூன்று கட்டப் போராட்டங்களை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.
"வரும் 31ஆம் தேதி நடைபெற உள்ள முதற்கட்டப் போராட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியினர் தங்கள் வீட்டின் முன்பாகவும் பொது இடங்களிலும் விலைவாசி உயர்வை எடுத்துரைக்கும் விதமாக சமையல் எரிவாயு உருளைகளுக்கு மாலை அணிவித்து, மேளமும் மணியும் அடிப்பார்கள்.
"அடுத்து ஏப்ரல் 2 முதல் 4ஆம் தேதி வரை காங்கிரஸ் கட்சி, தொண்டு அமைப்புகள், மத, சமூக அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து நாடு முழுவதும் மாவட்ட அளவில் மறியல் போராட்டங்களும் பேரணிகளும் நடைபெறும்.
"ஏப்ரல் 7ஆம் தேதி மாநில தலைநகரங்களிலும் தொண்டு அமைப்புகள், மத, சமூக அமைப்புகளுடன் இணைந்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபடுவர்," என்றார் ரன்தீப் சுர்ஜிவாலா.

