கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் எட்டு பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தி உள்ளது. இதுவரை 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிர்பூம் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறையின்போது போக்டூய் கிராமத்தில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில், இரண்டு குழந்தைகள் உள்பட எண்மர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இதுகுறித்து அம்மாநில சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொண்டது. முதற்கட்டமாக பத்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர் ஒருவரை கைது செய்தது சிறப்புப் புலனாய்வுப் பிரிவு.
எனினும் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு கோல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் குழு வன்முறை நிகழ்ந்த கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டது. அதன் முடிவில் 22 பேர் மீது அது வழக்குப் பதிவு செய்தது.
ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள அப்பகுதி திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் அனருல் ஹசனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அவர்தான் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.
இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவமானது ஒரு சதித்திட்டம் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, பிர்பூம் வன்முறைச் சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
அவையில் தொடர்ந்து அமளி நிலவிய நிலையில், பாஜக உறுப்பினர்கள் ஐந்து பேர் அவை நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதற்கு அம்மாநில பாஜக தலைமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

