மத்திய அரசைக் கண்டித்து 220 மில்லியன் தொழிலாளர்கள் பங்கேற்றதாகத் தகவல்
புதுடெல்லி: மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் நேற்றுத் தொடங்கிய இரண்டு நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பொதுப் போக்குவரத்து, வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன. சில மாநிலங்களில் கடைகள், உணவகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கக்கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் நேற்றும் இன்றும் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.
இதில் பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. மொத்தம் 200 மில்லியன் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் சார்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
சில மாநிலங்களில் நேற்று ரயில் மறியல், கண்டன முழக்கங்கள் எழுப்பும் போராட்டங்களில் தொழிலாளர்கள் பங்கேற்றனர். மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.
கேரளாவில் அனைத்து பள்ளிகளுக்கும் இரண்டு நாள்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் பங்கேற்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்த போதிலும், தொழிலாளர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.
தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.
மக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மின்சார அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக, மருத்துவமனை, ரயில்வே, ராணுவம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மின்சாரம் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதை உறுதி செய்ய ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் நேற்று தீவிர சுற்றுக்காவல், கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதற்கிடையே, இன்றும் தொழிற்சங்கங்களின் போராட்டம் நீடிக்கிறது.

