புதுடெல்லி: அண்மையில் இந்தியாவுக்கு வருகை மேற்கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, பிரதமர் மோடியைச் சந்திக்க விரும்பியதாகவும் மத்திய அரசு அவரது கோரிக்கையை ஏற்கவில்லை என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது அதிகாரபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவில் இருந்து நாடு திரும்பிவிட்டார் சீன வெளியுறவு அமைச்சர்.
கல்வான் பகுதியில் இருதரப்பு ராணுவமும் மோதிக்கொண்ட நிகழ்வுக்குப் பிறகு சீன வெளியுறவு அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை மேற்கொள்வது இதுவே முதல் முறை.
புதுடெல்லியில் இந்திய வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்துப் பேசினார் வாங் யீ.
அதன் பின்னர் அவர் பிரதமர் மோடியைச் சந்திக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
எனினும், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், சீன அமைச்சரின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாகப் பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்கச் சென்றுவிட்டதால் பிரதமரைச் சந்திக்க இயலாது என மத்திய அரசு தரப்பு சீன அமைச்சரிடம் காரணம் கூறியதாகவும் அந்த ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.
இதையடுத்து, இருதரப்பு உறவு இன்னும் வழக்க நிலைக்குத் திரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

