புதுடெல்லி: பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள சித்ரா ராமகிருஷ்ணாவின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது கையெழுத்து மாதிரிகளைக் கேட்டு சிபிஐ தாக்கல் செய்த விண்ணப்பத்தின் மீது நீதிமன்றம் விரைவில் உத்தரவு பிறப்பிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்குச்சந்தையின் ரகசிய தகவல்களை இமயமலையில் இருக்கும் சாமியார் ஒருவரிடம் சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்ததாக புகார் எழுந்துள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் மேலாண் இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பில் இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா.
தனது பதவிக்காலத்தில் தேசிய பங்குச்சந்தையில் பணி நியமனம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் அவர் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து, மூன்று கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்தது. தற்போது அவரது நீதிமன்றக் காவல் ஏப்ரல் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

