இரு மாநிலங்களைக் குறிவைக்கும் ஆம்ஆத்மி: காங்கிரசுடன் இணையும் கனுகோலு
புதுடெல்லி: விரைவில் நடைபெற உள்ள மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு மாநிலத்திலாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் கட்சித் தலைமை வியூகங்களை அமைத்து வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி இரண்டு மாநிலங்களைக் குறிவைத்துள்ளது.
அடுத்த சில மாதங்களில் கர்நாடகா, குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத்தில் எப்படியும் வெற்றி உறுதி என பாஜக தலைமை நம்பிக்கையோடு உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பெரும் வெற்றியைப் பதிவு செய்து, இந்திய அரசியல் களத்தில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தி உள்ள ஆம் ஆத்மி, அடுத்து இமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய இரு மாநிலங்களைக் குறி வைத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில், ஆம் ஆத்மியின் வளர்ச்சியை தடுத்தால் மட்டுமே தேசிய அரசியலில் வலுவான சக்தியாக நீடிக்க முடியும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
காங்கிரஸ் மாநிலத் தலைவர்களை தொடர்புகொண்டு கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வரும் ராகுல் காந்தி, தேர்தல் நடைபெற உள்ள மூன்று மாநிலங்களுக்கு தொடர்ந்து பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பார் என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
"நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து ஒடுக்குமுறை சக்திக்கு எதிராக போராட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதனை முன்னெடுக்க வேண்டும்," என்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் மம்தா.
இது தொடர்பாக, பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் மம்தாவுடன் இணைந்து செயல்பட முன்வந்தாலும், எதிர்க்கட்சிக் கூட்டணியானது காங்கிரஸ் கட்சி தலைமையில்தான் அமைய வேண்டும் என்பதில் சோனியாவும் ராகுலும் உறுதியாக உள்ளனர். ஆனால் மம்தா தரப்பு இதை ஏற்குமா என்பது தெரியவில்லை.
இதற்கிடையே, எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக ஆலோசகராக கனுகோலு பணியாற்ற உள்ளதாகத் தெரிகிறது. இவர் பிரபல தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் நண்பராவார்.

