ஹைதராபாத்: வங்கிப் பாதுகாப்பு பெட்டக அறையில் வைத்து பூட்டப்பட்ட 84 வயது முதியவர் 18 மணி நேரத்துக்குப் பின்னர் காவல்துறையால் மீட்கப்பட்டார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த வியாபாரியான கிருஷ்ணா ரெட்டி, சில முக்கிய ஆவணங்களை தனது பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்பதற்காக ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வங்கிக் கிளைக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார்.
வங்கி ஊழியர் ஒருவர் அவரை பெட்டக அறைக்கு அழைத்துச் சென்று, வெளியில் காத்திருந்தார். பிறகு ஏதோ கவனக்குறைவாக முதியவர் பெட்டக அறையில் இருப்பதை மறந்து அவர் மற்ற பணிகளை கவனிக்கச் சென்றுவிட்டார்.
அன்று மாலை வங்கி ஊழியர்கள் அனைவரும் சென்றதும், பெட்டக அறையும் வங்கியும் பூட்டப்பட்டன. இதை அறியாத முதியவர் கிருஷ்ணா ரெட்டி, வங்கி ஊழியர் வருவார் எனக் காத்துக்கிடந்துள்ளார்.
அன்று அவர் கைபேசி கொண்டு வரவும் மறந்துவிட்டதால், உதவி செய்வார் யாருமின்றி காற்றோட்டமில்லாத பெட்டக அறையில், தவிக்க நேரிட்டது.
அவரைக் காணாமல் குடும்பத்தார் காவல்துறையில் புகார் அளிக்க, வங்கிக்கு விரைந்து வந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல் ஆய்வாளர் பார்வையிட்டார். அதில் முதியவர் வங்கிக்கு வந்தது மட்டுமே பதிவாகி இருந்தது.
எனவே அவர், வங்கிக்குள்தான் இருப்பார் என்று முடிவு செய்து, பாதுகாப்புப் பெட்டக அறையை திறந்து பார்த்தபோது, அங்கு கிருஷ்ணா ரெட்டி மயங்கிய நிலையில் காணப்பட்டார். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

