புதுடெல்லி: ஐரோப்பாவில் ஏற்பட்ட அண்மைய சில நிகழ்வுகளால் அனைத்துலக நிலைத்தன்மை என்பது கேள்விக்குறியாகி உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் வட்டாரப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது முன்னுரிமை பெறுகிறது என்று 'பிம்ஸ்டெக்' உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்றுப் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
இந்தியா, இலங்கை, பங்ளா தேஷ், மியன்மார், தாய்லாந்து, நேப்பாளம், பூடான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய 'பிம்ஸ்டெக்' அமைப்பின் பொருளாதார, தொழில்நுட்ப மாநாடு நேற்று இலங்கையில் நடைபெற்றது.
இதில் காணொளி வசதி மூலம் கலந்துகொண்டு உரையாற்றினார் பிரதமர் மோடி.
அப்போது, அந்த அமைப்பின் இலக்குகளை எட்டுவதற்கு உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்துச் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
"ஐரோப்பாவில் அண்மையில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் உலகளவில் நிலைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. எனவே, 'பிம்ஸ்டெக்' அமைப்பானது வட்டார ரீதியிலான ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. மேலும், வட்டாரப் பாதுகாப்பு என்பதும் தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.
"நாம் சுகாதார, பொருளியல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். எனவே, இப்போது நமக்குள் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் இருப்பதுதான் மிக அவசியம்.
"வங்காள விரிகுடா என்பது இணைப்பு, செழிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கான பாலமாக உருப்பெற வேண்டும்," என்றார் பிரதமர் மோடி.
அனைத்துலக மக்கள் தொகையில் 21.7 விழுக்காடு 'பிம்ஸ்டெக்' உறுப்பு நாடுகளின் பங்களிப்பு என்று குறிப்பிட்ட அவர், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தைப் பொருத்தவரை, 3.8 டிரில்லியன் மதிப்பு கொண்டதாக 'பிம்ஸ்டெக்' அமைப்பு உள்ளது என்றார்.
எனவே, உலகப் பொருளியல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் உந்துசக்தியை வழங்கும் ஆதிக்கமுள்ள அமைப்பாக அந்த அமைப்பு உருவெடுத்துள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
"கடந்த 1997ஆம் ஆண்டு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சாதித்தது போல், நம்முன் உள்ள இலக்குகளை எட்ட உறுப்பு நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்," என்றார் மோடி.