மும்பை: போதைப் பொருள் தொடர்பாக இந்தி நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான் மீது வழக்குப் பதிவாகி உள்ள நிலையில், அதில் புலனாய்வு முகமை தரப்பு சாட்சி மாரடைப்பால் காலமானார்.
36 வயதான பிரபாகர் சைல் என்ற அந்த ஆடவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று தன் வீட்டில் காலமானதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.
இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிப்பது தொடர்பாக ரூ.25 கோடி லஞ்சமாக பட்டுவாடா செய்யப்படுவது குறித்த உரையாடலை பிரபாகர் சைல் இடைமறித்துக் கேட்டதாகக் கூறப்பட்டது.
அதில் எட்டு கோடி ரூபாய் தொகையானது இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரித்த அதிகாரியான சமீர் வான்கடேவுக்கு தரப்பட இருந்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பிரபாகர் சைல் திடீர் மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கான், சில வாரங்கள் சிறையில் கழித்த பிறகே பிணையில் வெளிவந்தார்.
இதற்கிடையே, பிரபாகர் சைல் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அவர் மும்பையில் உள்ள செம்பூர் மாஹுல் பகுதியில் வசித்து வந்தார். வெள்ளிக்கிழமை மாலை அங்குள்ள வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
"உடனடியாக அவர் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் முன்பே இறந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்," என்று காவல்துறை தெரிவித்ததாக மும்பை ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் ஆர்யன் கான் மீதான வழக்கு விசாரணை தீவிரமடைந்து வருகிறது.

