புதுடெல்லி: உலக பணக்காரர்கள் தரவரிசையில் சுமார் ரூ.7 லட்சத்து 60,000 கோடி (100 பில்லியன் டாலர்) சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் புதிய வரவாக கௌதம் அதானி சேர்ந்துள்ளார்.
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, சுமார் ரூ.7 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஆசியாவின் பணக்காரராக இடம்பெற்றுள்ளார். உலகின் முதல் 10 பணக்காரர்கள் தரவரிசையில் உள்ள எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் போன்றோர்களின் வரிசையில் கௌதம் அதானி 10 ஆவது இடத்தை பிடித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் அம்பானி 11 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, கௌதம் அதானி நூறு பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துகளைக் கொண்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபராக உள்ளார்.
டெஸ்லாவின் எலான் மஸ்க் 273 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய செல்வந்தராகத் தொடர்கிறார், அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெஸோஸ் 188 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
2021 பிப்ரவரி மாதம் ஆசியாவிலேயே பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி இருவரும் மார்க் ஜூக்கர்பெர்க்கை பின்னுக்குத் தள்ளியுள்ளனர்.
கௌதம் அதானி கடந்த ஆண்டில் மட்டும் தனது நிகர சொத்து மதிப்பில் 23.5 பில்லியன் டாலர்களை சேர்த்துள்ளார். அதே நேரத்தில், அம்பானி, 90 பில்லியன் டாலர் மதிப்புக்கும் குறைவான சொத்தைக் கொண்டுள்ளார்.
59 வயதான அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, சுரங்கங்கள், இயற்கை எரிவாயு, துறைமுகங்கள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தராக இருந்து வரும் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தின் உரிமையாளராகவும் உள்ளார்.