கௌதம் அதானியின் சொத்து 100 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளது.
நூறு பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து உள்ள பத்து பேரில் இனி அவரும் ஒருவர்.
அதன் வழி, அவர் ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர் ஆகியிருக்கிறார்.
பில்லியன் டாலருக்கு மேல் வைத்திருப்பவர்களின் சொத்துகளைக் கண்காணிக்கும் புளூம்பெர்க் பில்லியனேர் செல்வந்தர் குறியீடு இதைத் தெரிவித்தது.
நூறு பில்லியன் டாலர் சொத்து வைத்திருக்கும் மற்றவர்களில் அமெஸான் நிறுவனத்தைத் தோற்றுவித்த ஜெஃப் பெஸோஸ், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க், பெரும் முதலீட்டாளர் வாரன் பஃபெட் போன்றவர்கள் அடங்குவர்.
இந்த பட்டியலில் இரண்டு பேர் அமெரிக்கர் அல்லாத மற்ற நாட்டவர்கள். ஒருவர் அதானி.
மற்றவர் பிரான்சை சேர்ந்த எல்விஎம்எச்எஃப் (LVMHF) சொகுசுப் பொருள் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் ஆர்னால்ட் ஆவார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அதானிக்கு கிட்டத்தட்ட 90 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து சேர்ந்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அவரது நிறுவனங்களின் பங்குவிலைகள் 1,000 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்துள்ளன.
தற்போது உலகின் பத்தாவது பெரிய செல்வந்தராக அதானி இருக்கும் நிலையில், 11வது இடத்தில் உள்ளார் இந்தியாவைச் சேர்ந்த சக செல்வந்தரான முகேஷ் அம்பானி.