பெங்களூரு: கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள முல்பாகலில் ராம நவமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு யாத்திரை நடைபெற்றது.
யாத்திரை ஜஹாங்கீர் மொஹல்லா பகுதி அருகே சென்றபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மர்ம நபர்கள் சிலை மீது கற்களை வீசித் தாக்கியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் சாலையில் சென்ற 2 கார்கள், 5 இரு சக்கர வாகனங்கள் தாக்கப்பட்டன. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். எனவே, முல்பாகலில் நேற்று மாலை வரை ஊரடங்கு உத்தரவு நடப்பில் இருந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள முல்பாகல் காவல்துறை யினர் கண்காணிப்புக் கேமரா காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

