அமராவதி: ஆந்திராவில் 25 பேர் கொண்ட புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். இதில், சட்டமன்ற உறுப்பினர் ரோஜா (படம்) முதன்முறையாக அமைச்சராகப் பதவியேற்றார். அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து ஆந்திராவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2019ஆம் ஆண்டில் முதல்வராகப் பதவி ஏற்ற பின்னர், அப்போது ஜெகன் அமைச்சரவையில் 25 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். ஆனால், வெறும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே இந்த அமைச்சர்கள் பதவி வகிப்பர் என்றும், அதன் பின்னர் புதியவர்களுக்கு மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் வாய்ப்பு வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.
இப்போது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நெருங்குவதால், புதிய அமைச்சரவையை நியமனம் செய்ய முதல்வர் ஜெகன் தீர்மானித்தார். அதன்படி, அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலகினர். இதனைத் தொடர்ந்து, இதுவரை சிறப்பாகப் பணியாற்றிய மற்றும் மூத்த அமைச்சர்கள் பட்டியல் முதலில் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர், புதிதாக யாருக்கு வாய்ப்பு வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது பழைய அமைச்சர்கள் பட்டியலில் இருந்து 10 பேரும், புதிதாக 15 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பழைய அமைச்சர்களில் ஆதி மூலபு சுரேஷ், பெத்திரெட்டி ராம சந்திரா ரெட்டி, நாராயணசாமி, பி. சத்யநாராயணா, ஜெயராம், அம்பாட்டி ராம்பாபு, ராஜேந்திரநாத் ரெட்டி, விஸ்வரூப், அப்பல ராஜு, வேணுகோபால கிருஷ்ணா, அம்ஜத் பாஷா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்களில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ஆர்.கே. ரோஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் முதன்முறை ஆந்திர அமைச்சரவையில் இடம் பெறுகிறார்.
நேற்று காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் ஆளுநர் விஸ்வபூஷண் ஹரிசந்தன் புதிய அமைச்சர்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

