புதுடெல்லி: ஓமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா கிருமி தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருகிறது. தற்போது பல்வேறு நாடுகளில் ஓமிக்ரான் எக்ஸ்.இ. என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தலா ஒருவருக்கு எக்ஸ்.இ. என்ற புதிய வகை கிருமி தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய அரசு நேற்று அவசர ஆலோசனை நடத்தியது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்ட் வியா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் உயர் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் எக்ஸ்.இ. வகை கொரோனா கிருமி இந்தியாவில் பரவாமல் தடுப்பது பற்றியும், அப்படி பரவினால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
புதிய வகை 'எக்ஸ்இ' கிருமிப் பாதிப்பின் தன்மையை ஆய்வு செய்யுமாறும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும் சுகாதார அமைச்சர் சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
மேலும், தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதைத் துரிதப்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நாடு முழுதும் கொரோனா தொற்று குறைந்த போதிலும் குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் டெல்லியிலும் தொற்றுப் பாதிப்பு அதிகரித்துள்ளது.
குஜராத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் கடந்த ஒரு வாரத்தில் 514 பேரும், டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் 943 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

